சுஜாதா இல்லாமல் ஓராண்டு


தோற்றம் – மே 3, 1935 – – – – மறைவு – பெப்ரவரி 27, 2008

நாம் கற்றதெல்லாம் உன்னிடத்தில் பெற்றது
நாம் பெற்றதெல்லாம் உன்னை கற்றதால் வந்தது

(எழுத்தாளர் சுஜாதாவின் மறைவை முன்வைத்து கலைஞர் முதல் கையெழுத்து பிரதி எழுத்தாளர்கள் வரை அஞ்சலிகளையும் அவரது படைப்புகள் பற்றிய ஆய்வுகளையும் எழுதி விட்ட நிலையில் அவரது பிறந்ததினமான இன்று (மே 3 1935) என்மீதான சுஜாதவின் பாதிப்புகள் பற்றி).

சுஜாதாவின் மறைவை ஒட்டி சில பத்திரிகைகளும் நபர்களும் அவர் ஒரு பைலட், ஒரு விஞ்ஞானி, பல வெற்றிப் படங்களில் பணிபுரிந்தவர் என்றெல்லாம் எழுதிவிட்டு போகிற போக்கில் 200 கதைகளும் எழுதியிருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார்கள். இதை வாசித்தபோது இவர்கள் மாமரத்தின் பயன் என்ன என்று கேட்டால் கீழிருந்து சீட்டாடலாம் என்று எழுதுவார்களோ என்று தோன்றியது. சுஜாதாவிற்கு விஞ்ஞானி, ஓவியர், முகாமையாளர், இசைவல்லுனர், திரைப்பட வசனகர்த்தா, திரைக்கதையமைப்பாளர் என்று பல முகங்கள் இருந்தாலும் அவரது அடையாளம் அவரது எழுத்தும் இலக்கியப்பணிகளுமே.

இந்த கட்டுரையின் தொடக்கத்தில் கலைஞர் முதல் … என்று எழுதிய காரணம் தற்போது எழுது கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் மிக நீண்டகாலமாக எழுதிக் கொண்டிருப்பவர் கலைஞர் என்பதும் எழுத்துப் பயணத்தில் தொடக்க நிலையில் இருப்பவர்கள் கையெழுத்துப்பிரதி எழுத்தாளர்கள் என்பதுமேயாகும். இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் இப்படி முதிர்ந்த, முதிர்ந்து வருகின்ற, முதிர போகின்ற பல தரப்பட்ட எழுத்தாளர்களையும் வாசகர்களையும் பாதித்த சுஜாதா, அதே சமயத்தில் அவர்களாலும் கவரப்பட்டு, அவ்விதம் தன்னை கவர்ந்த ஆக்கங்களை பரப்புகின்ற ஒரு இலக்கிய பிரச்சாரகராகவும் விளங்கியிருக்கிறார் என்பதேயாகும்.

புதிய அல்லது இளைய வாசகர்களை பொறுத்தவரை சுஜாதா ஒரு எழுத்தாளர் என்பதையும் தாண்டி, நல்ல எழுத்துக்களை அறிமுகம் செய்து வைக்கின்ற ஒரு நண்பராக எடுத்த பங்கு மிக முக்கியமானது. என்னுடைய சொந்த அனுபவத்தில் சல்மா, மனுஷ்யபுத்திரன், ஜெயமோகன், கி.ரா, சாரு நிவேதிதா, மகுடேஸ்வரன் போன்றவர்களின் பெயர்களை கூட சுஜாதா இல்லாவிட்டால் நான் தெரிந்துகொண்டிருக்கமாட்டேன். சுஜாதாவை வாசிக்க முன்பாக என்னுடைய இலக்கிய உலகம் என்பது தமிழ்வாணன், சிவசங்கரி, பாலகுமாரன் என்ற அளவில்தான் இருந்தது

திரைப்பட பாடல்களில்கூட வைரமுத்து பாடல்கள் புனைவது குறைந்த 2000களின் பின்னர் ஒரு வெறுமையை நான் உணர தொடங்கியிருந்த காலப்பகுதியில் அவர் காதல் திரைப்படத்தில் நா. முத்துக்குமார் எழுதியிருந்த “ஒரு குழந்தை என நான் நினைத்திருந்தேன்; உன் கண்களிலே என் வயதறிந்தேன்” என்கிற வரிகளை சிலாகித்து எழுதியிருந்தார். பிற்பட்ட காலத்தில் நா. முத்துக்குமார் உண்மையாகவே மருதகாசி – கண்ணதாசன் – வைரமுத்து என்று தொடர்ந்த பாடலாசிரியர்கள் வரிசையிலே தன்னை பலமாக நிலை நிறுத்திக்கொண்டார். (கவிஞர் வாலி பற்றி இங்கே குறிப்பிடவில்லை காரணம், கண்ணதாசனுக்கு சமகாலத்தவரான வாலி கண்ணதாசனுக்கு எதிர்கடை விரித்ததை போல வைரமுத்துவிற்கும் போட்டியாளராகவே திகழ்ந்தார். இளையராஜா வைரமுத்துவுடன் இணைந்து பணியாற்றியது வெறும் 4 ஆண்டுகள் தான், ஆனால் இப்போதும் கூட இவர்கள் மீண்டும் இணைய மாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டு இருக்கின்ற எத்தனையோ ரசிகர்கள் இருக்கின்றார்கள்) அதேபோல யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த மனதை திருடி விட்டாய் திரைப்படத்தில் வருகின்ற மஞ்சக் காட்டு மைனா… என்ற பாடலையும் வெடுவாக சிலாகித்து எழுதியிருந்தார். அடுத்தடுத்த வருடங்களிலேயே யுவனும் ராம், காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலணி என்று இசையுலகின் உச்சத்தை எட்டினார்.
இவற்றிற்கெல்லாம் மிக நீண்ட காலத்திற்கு முன்பாக கணையாழி இதழில் கமலஹாசன் பற்றி எழுதியபோது “தமிழின் நவ சினிமாவுக்கான எதிர்காலத்தை இந்த இளைஞரிடம் பார்க்கிறேன். இப்பாது அவருக்கு வயது 24” என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல ரோஜா திரைப்படம் எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கையில் “குழந்தை முகம் கொண்ட இந்த இளைஞரிடம் அபார இசை ஞானம் இருக்கின்றது. He will go for places” என்று ஏ. ஆர். ரஹ்மான் பற்றி கூறியிருந்தார். சுஜாதா பற்றிய நினைவுக் கட்டுரை ஒன்றில் மனுஷ்யபுத்திரன் குறிப்பிட்டது போல அவருக்கு நல்ல கவிதைகளை (கவிதை என்று மனுஷ்ய புத்திரன் குறிப்பிட்டிருந்தார், என்னை பொறுத்தளவில் எந்த ஒரு விடயத்திலும்) இனம் காணுகின்ற விசேஷமான மோப்ப சக்தி ஒன்று இருந்திருக்கவேண்டும்.
சுஜாதா என்றவுடன் குறும்பு கொப்பளிக்கின்ற அந்த வசன நடையையும் இளமையையும் அடுத்து ஞாபகம் நிற்பது மரபுகளை உடைத்தது. இன்று மிகப் பிரபலமாகியுள்ள பத்தி எழுத்தினை (Column writing / blogging) அறிமுகப்படுத்தியவர் அல்லது பிரபலப்படுத்தியவர் கூட சுஜாதாதான். என்ன இவர் டைரி எழுதுவது போல எழுதிகிறாரே, இதையெல்லாம் கூட பிரசுரிக்கின்றார்களே என்று விசனப்பட்டவர்கள் கூட இருக்கின்றார்கள். சுஜாதாவின் வண்ணான் கணக்கைகூட பிரசுரிக்ககூடிய வணிகப் பத்திரிகைகள் என்ற விமர்சனம் எழுந்தபோது சாவி உண்மையாகவே சுஜாதாவின் வண்ணான் கணக்கை வாங்கி பிரசுரித்தார் என்றும் சொல்வார்கள். சொல்லப்போனால், நீர்க்குமிழிகள், கணையாழியின் கடைசி பக்கங்கள், கற்றது பெற்றதும் போன்றனவே இன்றைய பத்தியெழுத்துக்களுக்கெல்லாம் முன்னோடிகள் மட்டுமல்ல முன் மாதிரிகளும் கூட.
அறிவியல் ரீதியான பார்வை கொண்ட சுஜாதா தமிழ் மொழி பற்றி தமிழர்களிடம் நிலவுகின்ற முட்டாள்தனமான சில கொள்கைகளை கேலி செய்தார். கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் தமிழ் தோன்றியது, முதல் மனிதன் பேசியது தமிழ் போன்ற கற்பிதங்கள் தமிழ் மொழிக்கு செய்யப்பட்ட துரோகங்கள் என்று டாப் 10 துரோகங்களில் பட்டியல் படுத்தினார். அளவுக்கு அதிகமாகப் பேசுவது, உணர்ச்சிவசப்படுவது எந்த விடயத்தையும் மிகைப்படுத்திச்சொல்லுவது போன்ற தமிழர்களின் கல்யாண குணங்களையும் பலமுறை விமர்சனம் செய்தார். (எந்த விடயத்தையும் மிகைப்படுத்தும் பழக்கம் தமிழர்களிடம் கலிங்கத்துப் பரணி காலம் தொட்டு நிலவுகின்றது. அரங்கம் நிறைந்த கூட்டம் என்றால் மைக் செட் காரரையும் சேர்த்து ப்தினொரு பேர் என்று அர்த்தம்). இந்த குணங்களை சிலர் திரிவுபடுத்தி சுஜாதா பிராமண வகுப்பை சேர்ந்தவர் என்பதால் இப்படி எழுதுகிறார் என்றும் அவர் தமிழ் மொழிக்கு எதிரானவர் என்றும் சொன்னது உண்டு. சுஜாதாவின் பாணியில் சொன்னால் அவர்களை பசித்த புலி தின்னட்டும். என்னை பொறுத்தவரை சுஜாதாவை ஜாதி ரீதியாக பிரிப்பது காற்றுக்கும் நீருக்கும் ஜாதி சொல்வது போன்றது.



ஏராளமான ஈழத்தமிழ் வாசகர்களை கொண்டிருந்தவர் சுஜாதா. அதே சமயம் ஈழத்து எழுத்துக்களை அவர் வெகுவாக நேசித்தும் இருக்கின்றார். மஹாகவி, ஜெயபாலன் ஆகியோரின் கவிதைகளை அவர் தொடர்ந்து மேற்கோள் காட்டியும் வந்திருக்கிறார். யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டபோது அவர் எழுதிய “ஒரு லட்சம் புத்தகங்கள்” தமிழ் மக்களின் கண்ணீருக்கு சாட்சியாக காலமெல்லாம் இருக்கப்போகும் ஒரு படைப்பு. அதேபோல தமது சுய லாபங்களுக்காக ஈழத்தமிழர் பிரச்சனையை பலர் பயன்படுத்துவதை சுட்டிக்காட்டிய கொலை அரங்கம் அனைவரும் படிக்கவேண்டிய ஒரு குறுநாவல். (83ல் எழுதப்பட்ட இக்கதையில் வருகின்ற உத்தம் போன்ற கதாபாத்திரங்களை இப்போதும் கூட காணலாம்). சுஜாதா பங்கேற்ற “கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படத்தில் ஈழத்தமிழர் பிரச்சனை சரியான முறையில் பதிவு செய்யப்படவில்லை என்ற காட்டமான விமர்சனம் பலரிடம் உண்டு. உண்மையில் ஈழத்தமிழர் பிரச்சனை போன்ற மிகுந்த சென்சிட்டிவ் ஆன பிரச்சனைகளை பதிவு செய்வதில் நடைமுறையிலும் சில தவிர்க்க முடியாத அரசியல் காரணங்களாலும் மிகுந்த தடைகள் உள்ளன என்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்.

தனது ஆரம்பகால எழுத்துக்களில் மிக தீவிரமாகவும் வலுவாகவும் தனது கருத்துக்களை சொன்ன சுஜாதா தனது பிற்காலத்தில் தனது விமர்சனங்களை சற்று மென்மைப் படுத்திக்கொண்டார். இதைப்பற்றி கேட்டபோது நான் நண்பர்களை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை என்று கூறியிருந்தாராம். இதைப்போன்ற இக்கட்டான தருணங்களை நடைமுறையில் நாம் எல்லாருமே அனுபவித்திருப்போம்.
சுஜாதா எல்லாவற்றையும் பற்றி எழுதுவார் ஆனால் எந்தப்பக்கமும் சார்பாகவும் எழுதமாட்டார் என்று அவர் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை ஒரு பாராட்டாகவும் கருதலாம். இதைப்பற்றி ஒருமுறை “நாங்கள் எல்லாம் எழுதத்தொடங்கும் போது சூரியனை சுட்டெரிப்போம், பூமியை புதிதாக அமைப்போம் என்றுதான் எழுத தொடங்கினோம். ஆனால் ஒரு மண்புழுவை கூட எம்மால் மாற்றி அமைக்கமுடையாது என்று பின்னர்தான் புரிந்துகொண்டோம்” என்று கூறியிருந்தார்.



எழுத்தாளர்கள் மத்தியில் ஒரு சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் சுஜாதா. அவருக்கு கட் அவுட்டுகள் கூட வைக்கப்பட்டிருக்கின்றன. எனது நண்பர்கள் மத்தியில் நான், தயாபரன், குணாளன் மூவரும் தீவிர சுஜாதா ரசிகர்கள். ஒரு எட்டு வருடங்களின் முன்பாக கொழும்பில் இருந்த எனது நண்பனுடன் தொலைபேசிக்கொண்டிருந்தேன். அது மிக தீவிரமாக பாலகுமாரனை வாசித்துக்கொண்டிருந்த காலம். அப்போது என் நண்பன் கூறினான் “நீ போற போக்கில சுஜாதாவையே மறந்திடுவாய் போல இருக்கே” என்று. இல்லையடாப்பா, என்ன இருந்தாலும் அவர் தான் எங்கட குரு என்று. மின்சாரம் தடைப்பட்டிருந்த யாழ்ப்பாணபகுதியில் எமது பொது அறிவு தேடல்களுக்கு ஒரே வடிகாலாய் இருந்தவை அவரது ஏன்? எதற்கு ? எப்படி?, தலைமைச்செயலகம், அறிவோம் சிந்திப்போம் போன்ற புத்தகங்கள் தான். அங்கே 11ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஏன்? எதற்கு? எப்படி? யில் படித்த குவாண்டம் மெகானிக்ஸ் பற்றி நானும் நண்பன் குணாளனும் பேசி பேசி ஒரு சந்தர்ப்பத்தில் அதுவே எமக்கு பட்டப்பெயராகவும் மாறிவிட்டது. அந்நாட்களில் எல்லாம் குரு என்றுதான் சுஜாதாவை குறிப்பிடுவோம். ஆனால் இப்போதுதான் புரிகிறது, சுஜாதா எம்மை அணுகாது, அகலாது, குருவுமாகி நின்ற ஒரு தோழனாகத்தான் இருந்திருக்கிறார் என்று. என்ன, எனக்கும் அவருக்கும் ஆக நாற்பத்தைந்து வயதுதான் வித்தியாசம். ஆனால் அவரது இழப்புதான் நான் முதன் முதல் உணர்ந்த தோழனின் மரணம்.



இது ஒரு மீள்பதிவு

37 thoughts on “சுஜாதா இல்லாமல் ஓராண்டு

Add yours

  1. சுஜாதா என்ற ஜாம்பவான் எம்மை விட்டு சென்று ஓராண்டு சென்றுவிட்டதா? ஓராண்டு என்ன ஓருநூறு ஆண்டு சென்றாலும் அவரின் புகழ் அழியாது. வாழ்க அவர் நாமம்!

    Like

  2. உங்களுடைய கட்டுரையால் என்னுடைய மனப்பாரம் சற்றுக் குறைந்ததுபோல் உள்ளது. அவருடைய பெறுமதியைத் தமிழ்நாடு சரியாகக் கணிக்கவில்லையோ என்ற ஒரு ஆதங்கம் எனக்கு இன்றும் உண்டு. சமகாலத் தமிழ் இலக்கிய உலகின் செம்மையான குரலாக அவர்மட்டுமே இருந்ததாக எனக்குத்தோன்றுகிறது . சாடவேண்டியவற்றை செம்மையாகவும் நாகரிகமாகவும் சாடும் கலை அவரிடம் மட்டுமே நட்புடன் இருந்தது. கலை இலக்கிய உலகின் தெளிவான மெட்றிக் அளவுகோலாக அவர் இருந்தார் ,( மற்றவர்கள் முழம் ,சாண் என்று உளறும் காலத்தில்).

    Like

  3. //ஓராண்டு என்ன ஓருநூறு ஆண்டு சென்றாலும் அவரின் புகழ் அழியாது. வாழ்க அவர் நாமம்//சுஜாதாவின் பெயரை கடவுள் பெயராக பாவித்து சுஜாதா சுழியை போட்டவர்களை நன்றாக நானறிவேன். சுஜாதா பெயரை வாழவைப்பது நவீன தமிழ் இலக்கிய வாசகர்களின் கடமை. இதை செய்வோம்,அவர் பெயரில் உயிர்மை உருவாக்கிய பரிசுகள் தொடரவேண்டும் என்பது என் ஆசை

    Like

  4. NAMAKKUM KONJAM VIVARAM THERIUM APPDADI NAME NAMBUVATHARKU SUJATHA SIR THAN KARANAM…PIDITHAVARGALAI PATTRI PADIPATHU KADHALI IN KADITHATHAI MARUPADI MARUPADI PADIPATHAI POL ORU SUGAM…YES I LOVE SUJATHA..

    Like

  5. நல்ல நினைவு கூறல். அவரை விமர்சித்தாலும் அவரது பாதிப்பு இல்லாத எழுத்தாளர்கள் எவரும் சம காலத்தில் இருக்க முடியாது. எல்லா வயது வித்தியாசங்களை கடந்தவர்..நாம் வாழ்ந்த காலத்தில் அவர் ஒரு பிரமிப்பு.. வேறு என்ன சொல்ல..??

    Like

  6. //தமிழின் ஒரே எழுத்தாளர் சுஜாதா தான். அது மட்டுமல்ல எழுத்தை ஆண்ட ஒரே தமிழன்//கனடா வந்த ஆரம்ப நாட்களில் வித்துவான் ராசரத்தினம் என்பவரிடம் தமிழில் கம்பராமாயணம் கற்க சென்றேன். அப்போது அவர் சொன்னார் எழுதுபவன் எல்லாம் எழுத்தாளன் அல்ல, எழுத்தை ஆளுபவன் தான் எழுத்தாளன் என்று. அவர் சொன்ன கருத்தை நினைவு கூர்ந்ததற்கு நன்றி

    Like

  7. வணக்கம் கே எஸ்.//அவருடைய பெறுமதியைத் தமிழ்நாடு சரியாகக் கணிக்கவில்லையோ என்ற ஒரு ஆதங்கம் எனக்கு இன்றும் உண்டு.//உண்மைதான், அவருக்கு கலைமாமணி கூட 2000களில் தான் கொடுக்கப்பட்டது. அதுதவிர எந்த விருதுமே அவருக்கு தரப்படவில்லை. ஆனாலும் எத்தனையோ விழுதுகளை தந்த எழுத்தாளர் அவர். என்னை பொறுத்தவரை நவீன இலக்கியத்தை எனக்கு அறிமுகம் செய்த இனிய நண்பர்/ குரு அவர்

    Like

  8. //PIDITHAVARGALAI PATTRI PADIPATHU KADHALI IN KADITHATHAI MARUPADI MARUPADI PADIPATHAI POL ORU SUGAM…YES I LOVE SUJATHA//ஐ லவ் யூ சுஜாதாஇது எத்தனையோ தடவை நான் வாசிப்பனுபவத்தின் உச்சியில் நான் கூவிய வார்த்தைகள்.காதலியின் பெயரை பிள்ளைக்கு வைக்கும் வழக்கத்தி எனக்கு ஆண் பிள்ளை என்ன, பெண் பிள்ளை என்ன வைக்கப்போகும் பெயர் சுஜாதாதான்

    Like

  9. //எல்லா வயது வித்தியாசங்களை கடந்தவர்..நாம் வாழ்ந்த காலத்தில் அவர் ஒரு பிரமிப்பு.. வேறு என்ன சொல்ல..??//புத்தக வாசிப்பு தரித்திரம் என்று சொல்லப்பட்ட ஒரு சமூகத்தில் எத்தனையோ பேருக்கு அணுக்கமாக நின்று வாசிப்பு பழக்கம் பழக்கியவர் சுஜாதா….முகியமாக எனக்கு

    Like

  10. //காதலியின் பெயரை பிள்ளைக்கு வைக்கும் வழக்கத்தி எனக்கு ஆண் பிள்ளை என்ன, பெண் பிள்ளை என்ன வைக்கப்போகும் பெயர் சுஜாதாதான்//அப்ப உங்கட காதலீண்ட பேரும் சுஜாதா தானா??????????????(இதுக்கு பேர் தான் உள்குத்தா??????????????????????)

    Like

  11. //Well said.Long live Sujatha’s writings !- Tamizhvirumbi.UK.//நன்றி தமிழ் விரும்பி…சுஜாதா வாசகர்கள் எல்லாம் சேர்ந்து மனுஷ்யபுத்திரனுடன் இணைந்து சுஜாதா விருதுகளை பெருமளவில் செய்ய வேண்டும். கலைமாமணி பட்டம் போன்றவை அர்த்தம் அற்று போன ஒரு சமூகத்தில் இது அவசியம்

    Like

  12. பெரு நன்றிகள் நர்சிம்,ஜூ வியில் உங்கள் எழுத்துகள் இடம்பெற்ற நிலையில் உங்கள் ஆதரவு பெரும் உற்சாகம் தருகின்றது. இதே போன்ற ஒரு மானசீக ஆதரவை தான் சுஜாதாவும் தந்தார்

    Like

  13. //sujatha is a great writer and he introduced lot of writers, poets. Like you I also came to know//சுஜாதா செய்த இந்தப் பளியை வேறு எவரும் இன்னும் செய்யத்தொடங்கவில்லை. வாரவாரம் ஆனந்தவிகடனில் நிறைய படப்பாளிகளை அறிமுகம் செய்தார் சுஜாதா. அவர் அறிமுகம் செய்த புத்தகங்களை எல்லாம் பட்டியல் இட்டு வைத்திருந்த ஒரு நண்பனை நான் அறிவேன்

    Like

  14. இரண்டு நூற்றாண்டுகளில்…வாழ்ந்து…எழுத்துலகில் கோலோச்சிய..நமது அன்பிற்கும்,மரியாதைக்கும் உரிய..ஒரு “மாபெரும் எழுத்தாளர்,நாவலாசிரியர்,இலக்கியவாதி,…அறிவியல்,சமூகம்,நாட்டுப்பாடல்கள்….இத்ற்கெல்லாம் அப்பாற்பட்டு…ஒரு மிகச்சிறந்த கணிணி பொறியாளர்..(திரு சுஜாதா அவர்கள் வடிவமைத்த….கணிணி மூலம் ஒட்டுப்போடும் இயந்திரம்…இன்றளவும்…இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள்து)…அனைவரும் அறிந்ததே…!!! “எனது ஆதர்ச எழுத்தாளர், பூத உடல் மறைந்தாலும்…புகழுடல் மறையாத…அறிஞ்ஞர்…திரு சுஜாதா அவர்களைப்பற்றி எழுத..இந்த ஒரு பின்னூட்ட பதிவு அதை நிறைவு செய்யுமா என்பதில்..இரு வேறு கருத்துக்கள் இருக்கலாம்…ஆயினும், முடிந்தவரை முயர்ச்சித்து இருக்கிறேன்…நன்றி…

    Like

  15. ஆனால் அவரது இழப்புதான் நான் முதன் முதல் உணர்ந்த தோழனின் மரணம். that is the beauty of sujatha. he never made the readers to feel that he is older than them

    Like

  16. //இந்த ஒரு பின்னூட்ட பதிவு அதை நிறைவு செய்யுமா என்பதில்..இரு வேறு கருத்துக்கள் இருக்கலாம்…ஆயினும், முடிந்தவரை முயர்ச்சித்து இருக்கிறேன்…நன்றி…//ஒரு எழுத்தாளனாக தமிழ் மொழியின் எல்லா சாத்தியங்களையும் சாதித்தவர் அவ்ர்…

    Like

  17. // kind of stopped reading booksafter Sujatha stopped writing.I dont want to say he is dead..:-(—Senthil//இப்படியான நிறைய நண்பர்களை அறிந்திருக்கின்றேன். என் நண்பர்கள் வட்டத்தில் அவரது பிரிவோம் சந்திப்போம் கதையை வாசித்துவிட்டு “மதுமிதா” என்றா பெயரில் பைத்தியமாக இருக்கின்ற ஒரு நண்பனை நன்கு உணர்ந்திருக்கின்றேன்

    Like

  18. Beautiful..//அழகானவர்களை வர்ணிக்கும்போது வார்த்தைகள் அழகாவது போல அவர் பற்றி எழுதும்போது கிறுக்கல்கள் கூட அழகாகிவிடுகின்றன

    Like

  19. ஆனால் அவரது இழப்புதான் நான் முதன் முதல் உணர்ந்த தோழனின் மரணம். that is the beauty of sujatha. he never made the readers to feel that he is older than them… .ம். என்றும் சலிக்காத எழுத்துகளுக்கு சொந்தக்காரர் அவர். (அசோகமித்திரன், அ. முத்துலிங்கம், சாருவும் இதே வகை)

    Like

  20. சுஜாதாவை பற்றி பேசி மாளாது தோழரே. நானும் உங்களைப் போல அவரால் உருவாக்கப்பட்டவனே.ஒரு தலைசிறந்த படைப்பாளிக்கு முக்கிய முத்திரை விமர்சனங்கள் தாம். விமர்சனம் செய்யும் போதுதான் அவரின் எழுத்துக்களை எந்தளவிற்கு படித்திருக்கிறார்கள் என்பதை அறியமுடியும். நன்றாக இருந்தது.

    Like

  21. வணக்கம் விஜயசாரதிஎம்மை போன்றா எத்தனையோ பேருக்கு துரோணாச்சாரியாராக இருந்தவர் சுஜாதா. என் நண்பன் ஒருவன் ஒரு கவிதையில் எழுதியதுபோலஅவர்“வித்தை தந்தும் விரல் கேட்காத துரோணாச்சாரியார்”

    Like

  22. உண்மைதான் ஆரம்பத்தில் இருந்த காத்திரமும், விமர்சனமும் பிற்காலங்களில் சுஜாதாவிடம் குறைந்திருந்தது அதற்கு அவருக்கு அப்போதிலிருந்த இளமையும் காலம் மாறும் என்கிற நம்பிக்கையும் காரணமாக இருந்திருக்கலாம் அந்த உறுதியில்; தான் அவதானித்த விசயங்களை புட்டு வைத்திருப்பார் அதற்கு கணையாழியின் கடைசி பக்கங்களே சாட்சி…இளமையான எழுத்தும் ரசனையும் அவருக்கே உரிய தனிச்சிறப்பு…நான் ஆச்சரியங்களோடு பார்த்துக்கொண்டிருந்த,ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என நினைத்த மனிதர்களுள் முதலிடங்களில் இருந்தவர்,ஆனால் முடியவில்லை…

    Like

  23. //உண்மைதான் ஆரம்பத்தில் இருந்த காத்திரமும், விமர்சனமும் பிற்காலங்களில் சுஜாதாவிடம் குறைந்திருந்தது அதற்கு அவருக்கு அப்போதிலிருந்த இளமையும் காலம் மாறும் என்கிற நம்பிக்கையும் காரணமாக இருந்திருக்கலாம் அந்த உறுதியில்; தான் அவதானித்த விசயங்களை புட்டு வைத்திருப்பார் அதற்கு கணையாழியின் கடைசி பக்கங்களே சாட்சி…//உண்மைதான் தமிழன் கறுப்பி. நாம் கூட எம் பதின்மங்களின் பின்பகுதியில் அதாவது 17 வயது முதல் 25 வயதுவரை இருந்த அதே சமூக கோபத்துடன் இப்போதும் இருக்கின்றோமா என்ற கேள்வியை ஏமக்குள் எழுப்பி பார்க்கவேண்டும்.

    Like

  24. சுஜாதா இல்லாத ஓராண்டில் அவர் இல்லாத் காரணத்தால் தமிழ் கூறும் நல்லுலகில் எதுவும் குடிமுழுகிய மாதிரி தெரியவில்லை. தமிழ் எழுத்துக்கள் எந்த ஒரு எழுத்தாளரை மட்டும் நம்பி இல்லை. இறந்தவரை அடக்கம் செய்துவிட்டு இருப்பவர்களை கவனிங்கப்பா. அவர் இறந்தபோது தான் ஏகப்பட்ட ஒப்பாரிப் பதிவுகளை படிக்கவேண்டியிருந்தது. இனி ஆண்டாண்டுக்கு திவசப் பதிவுகளை வேறு படிக்க வேண்டுமா?

    Like

  25. அனாமி,இத்தனை காழ்ழ்புணர்வு தேவையா?அவர் பற்றி விமர்சனங்கள் இருந்தாலும் அவர் அளாவுக்கு எந்த தமிழ் எழுத்தாளார்களும் தமிழின் ஏனைய நல்ல் எழுத்துக்களை, இலக்கியங்களை, படைப்பாளிகளை அறிமுகம் செய்ததில்லை.இதன் விளைவுகள் இனிவரும் காலங்களில்தான் பிரதிபலிக்கும்

    Like

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑