தற்பாலினர் குறித்து தேவகாந்தன் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை – அருண்மொழிவர்மன்

முன்பொரு முறை அ. மார்க்ஸ் பற்றி எழுதிய கட்டுரை ஒன்றில்  “ஒருவர் ஓரிடத்தில் சரியான அல்லது தெளிவான பார்வையுடன் இருக்கிறார் என்றால் அவர் எல்லா இடத்தும் அப்படி இருக்கவேண்டும் என்பது இல்லை. எழுத்தாளர்கள் உள்ளிட்ட நிறைய ஆளுமைகளை அணுகும்போது இதே கருத்துடன் அணுகுவதே எனது வழக்கம்” என்று குறிப்பிடிருந்தேன்.  துரதிஸ்டவசமாக இதே மேற்கோளை எனக்கு அதிகம் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான தேவகாந்தனுடனும் இணைத்துப் பார்க்கவேண்டிய நிலையை அடைந்துள்ளேன்.
 

கனடாவில் இருந்து வெளிவருகின்ற “தாய்வீடு” என்கிற பத்திரிகையில் தேவகாந்தன் பக்கங்கள் என்கிற பெயரில் பத்தி ஒன்றினை தேவகாந்தன் எழுதி வருகின்றார்.  அதில் இரண்டாவது கட்டுரையாக அவர் எழுதிய கட்டுரை பற்றிய சில எதிர்வினைகளை இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன்.  மேற்படி கட்டுரையை அவர் தனது வலைப்பக்கத்திலும் (http://devakanthan.blogspot.com/2010_12_01_archive.html) பதிவு செய்திருக்கிறார்,  எனவே இந்தக் கட்டுரையை தொடர்ந்து வாசிக்க முன்னர் அவர் எழுதிய கட்டுரையை மேற்படி இணைப்பில் சென்று வாசிப்பது புரிதலுக்கு இலகுவாக இருக்குமென்று நம்புகின்றேன்.  தேவகாந்தனின் கட்டுரையை வெளியிட்டிருந்த தாய்வீடு பத்திரிகை இந்த எதிர்வினையையும் வெளியிடுவதே அதிகம் பொருத்தமானது என்றாலும், அவ்வாறு வெளிவராதவிடத்து குறைந்த பட்சம் எனது வலைப்பதிவுகளிலேனும் இதற்கான எதிர்வினையை பதிவு செய்யவேண்டியது அவசியம் எனக் கருதுகிறேன்.
 

தற்பாலினர் என்ற விடயத்தில் உரையாடல் ஒன்றுக்கான எல்லா வாசல்களையும் மூடி வைத்து விட்டு ஒற்றைப்படையான தீர்ப்பொன்றை வழங்குவதில் எனக்கு உடன்பாடில்லை.    அதே நேரம் தற்பாலினர் சார்ந்த விடயங்கள் போன்ற ஒருவரது பாலியல் விழைவுகள் சார்ந்த தேர்வுகள் அவரது அடிப்படை உரிமை சார்ந்தே கருதப்படவேண்டியன என்பதே எனது நிலைப்பாடு.  அண்மையில் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார், தற்பால் விழைவாளர்கள் தமது பாலியல் தேவைகளுக்காக பிறரைக் கட்டாயப்படுத்தியதையும், துஷ்பிரயோகம் செய்ததையும் கண்டதாலேயே தான் தற்பால் விழைவோரை எதிர்க்கத் தொடங்கியதாக.  மிக மிகத் தவறான நிலைப்பாடு இது.  இதே அடிப்படையில் பார்த்தால் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் மிக அதிகம் என்பதை அனேகம் பேர் அறிந்தே இருப்போம்.  அவற்றில் பெரும்பாலானவை ஆண்களாலேயே செய்யப்படுகின்றன.  ஒருவர் இதை முன்வைத்து நான் எதிப்பால் விழைவோரை எல்லாம் வெறுக்கிறேன் என்று சொன்னால் அது அவரது புரிதலின் குறைபாடா அல்லது எதிப்பால் விழைவோரின் தவறா?.  பாலியல் துஷ்பிரயோகங்களை முன் வைத்து ஒரு சாராரின் பாலியல் விழைவையும் கூடவே அவர்களையும் வெறுப்பது / நிராகரிப்பது என்பது தவறான முன்னுதாரனமே.  கட்டுரையில் ஓரிடத்தில் தேவகாந்தன் கூறுகிறார்,

“இவர்களில் சிலவகையானவர்களுடன் எனக்கு பல்வேறு தருணங்களில் பழகுவதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.  இவர்களது வாழ்வு நிலையின் நேரடித் தரிசனம் என்னை அதிரவே வைத்திருக்கின்றது”

என்று.  தேவகாந்தன் நேரடித் தரிசனம் என்று எதனை குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை.  அதையும், அவை எவ்வாறு தற்பாலினரை வெறுப்பதற்குக் காரணமாயின என்பதையும் தேவகாந்தன் விளக்கமாக எழுதவேண்டும்.  மூன்றாம் பாலினர்களுக்கு எதிரான நிலைப்பாடு உடையவர்களும் முன்னர் தங்கள் நிலைப்பாட்டை நியாயப்படுத்த மூன்றாம் பாலினர் பிச்சை கேட்கும்போது செய்யும் வற்புறுத்தல்களையும், அவ்வாறு பணம் கொடுக்கப்படாதவிடத்து கேவலமான முறையில் திட்டுகின்றனர் என்பது போன்ற குற்றச்சாற்றுகளையும் முன்வைப்பது வழக்கம்.  ஆனால் இவற்றுக்கான அடிப்படையைப் புரிந்து கொள்ளல் வேண்டும்.  சமூக அளவில் எல்லாவிதமான அங்கீகாரங்களும் மறுக்கப்பட்டிருந்த இந்தியச் சூழலில் (இது போன்ற குற்றச்சாற்றுகள் இந்தியாவை ஆதாரமாக வைத்தே முன்வைக்கப்பட்டன)  உயிர்வாழ்வதற்கான தேவையே அவர்களின் இது போன்ற நடவடிக்கைகளுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன.  மூன்றாம் பாலினரின்வாழ்க்கை நிலைகளைப் பேசுகின்ற ரேவதி தொகுத்த “உணர்வும் உருவமும்”, மற்றும் மகாராசன் தொகுத்த “அரவாணிகள்; உடலியல் – உளவியல் –வாழ்வியல்”, லிவிங்ஸ்மைல் வித்யாவின் சுயசரிதையான “நான் சரவணன் வித்யா” போன்ற புத்தகங்கள் இந்தியச் சூழ்நிலையில் மூன்றாம் பாலினர் உயிர் வாழவே எதிர் கொள்ளக் கூடிய சிக்கல்களைப் பேசுகின்றன.  எனவே மூன்றாம் பாலினர்கள் வாழ்வதற்கான எல்லா உரிமைகளையும் தனக்கிருக்கின்ற பெரும்பான்மை என்கிற பலத்தால் மறைத்தும் தடுத்தும் வைத்துள்ள  சமூகம் மீது எமது கோபத்தைக் காட்டாமல் மூன்றாம் பாலினர் மீது எமது வெறுப்பைக் காட்டுவது எப்படிப் பொறுத்தமற்றதோ அதை ஒத்ததே தற்பாலினர்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல் எழுப்பாமல், அவர்களைத் தொடர்ந்து கேலிக்கும், அவதூறுக்கும் ஆளாக்கிவரும் பெரும்பான்மை சமூகத்துக்கு தற்பாலினர் பற்றிய புரிதல்களையும், அவர்களுக்கான எல்லா நியாயங்களையும் புரியவைக்காமல் / அப்படிச் செய்வதற்கான முயற்சிகள் எதையும் எடுக்காமல் தற்பாலினர் மீதான வெறுப்பைக் கக்குவதும்.  இந்த அடிப்படையில் தேவகாந்தன் கட்டுரையில் குறிப்பிடுகின்ற

“…..அதனால் விபசாரர்கள், குற்றவாளிகள், அரவாணிகள் போல தற்பால் புணர்ச்சியாளர்ளையும் எளிதில் என்னால் வரவேற்று விட முடியாதிருக்கின்றது.  அது ஒரு தனி மனித பிரச்சனையே எனினும்  அதையும் மீறி அது ஒரு தனி மனித வக்கிர நிலையை அடைந்து வருவதால், இது சமூகப் பிரச்சனையும் தான் ஆகின்றது என்பதே என் திடமான கருத்து.”

என்னளவில் மேலே சொன்ன கருத்துக்களை துளியேனும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  தேவகாந்தனுக்கு அவரது கருத்துக்களை வெளியிடுவதற்கான எல்லா உரிமைகளும் இருக்கின்றது என்பதில் நான் குறுக்கிடவில்லை, ஆனால் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அவதூறுகளையும், கருத்தை வெளியிடுகிறேன் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது வெறுப்பைத் தூண்டும் வார்த்தைகளையும் வெளியிடுவது எந்த விதத்திலும் ஏற்புடையதன்று.  தவிர கட்டுரையில் “அதையும் மீறி அது ஒரு தனி மனித வக்கிர நிலையை அடைந்து வருவதால்” என்று கூறுகின்ற கட்டுரையாளர் அவ்விதம் பொத்தாம் பொதுவாகக் குறிப்பிடாமல், அதற்கான ஆதாரங்களை முன்வைக்கவேண்டும்.
 

அது போலவே கட்டுரையில் தற்பாலினர் என்பதற்குப் “தன் பால் புணர்ச்சியாளர்” என்கிற பதமே பிரயோகிக்கப்படுகின்றது.  பாலியல் விழைவுகள் குறித்த சரியான தமிழ்ச் சொற்கள் இல்லையென்பது உண்மையே.  Friends Against Homophobia என்கிற பெயரில் நாம் ஒழுங்கு செய்திருந்த கூட்டத்திலும் தமிழில் பாவனையில் இருக்கின்ற பாலியல் தேர்வுகள் குறித்த சொற்களுக்காக பற்றாக்குறை பற்றியே பலராலும் பேசப்பட்டது.  சிநேகிதன் அமைப்பைச் சார்ந்த டன்ஸ்ரனுடன் பேசியபோது அவரும் இது பற்றித் தெரிவித்ததாக நண்பர்களூடாக அறிந்திருக்கிறேன்.  ஆனால், என்னதான் சொற்கள் இல்லையென்றாலும் சில சொற்களைப் பிரயோகிப்பதைத்  தவிர்ப்பதே ஆரோக்கியமானது.  தன் பால் புணர்ச்சியாளர்கள் என்று சொல்கின்ற போது அந்த உறவுகளை அவர்கள் புணர்ச்சிக்காகத் தேர்ந்தெடுக்கின்ற பாலினர் சார்ந்து மாத்திரமே பிரித்து விடுவதாகா ஆகிவிடாதா?  ஒரு உதாரணத்துக்கு எதிர்ப்பால் விழைவோர்களை “எதிர்ப்பால் புணர்ச்சியாளர்” என்று அழைத்தால் எவ்வளவு அபத்தமாக இருக்கும்.  இந்த எதிர்வினையில் நான் உபயோகித்த “எதிர்ப்பால் விழைவோர்” என்ற அடையாளப்படுத்தலிலும் கூட அதற்கேயுரிய குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.  தவிர எனக்கு எந்தவிதமான அடையாளப்படுத்தல்களிலும் உடன்பாடில்லை.  (அடையாளப்படுத்தல்களின் அரசியல் பற்றி இன்னும் ஆழமாக வாசிக்காமல் அது பற்றிப் பெரிதாகப் பேசவேண்டாமென்று நினைக்கின்றேன்.)  ஆனால் “எதிப்பால் புணர்ச்சியாளர்கள்” என்று சொல்லும்போது அவர்களின் உறவு நிலையை முழுக்க முழுக்கப் புணர்ச்சியுடனேயே சம்பந்தப்படுத்திப் பார்ப்பதாகிவிடுகின்றது அல்லவா.  2009ல் வெளியாகி இருந்த கோவா என்கிற தமிழ்த் திரைப்படமே தமிழ்ச்சூழலில் தற்பால் விழைவோரைப் பற்றி அதிகம் சரியாகக் காண்பித்த திரைப்படமாக இருக்கின்றது.  சிநேகிதம் அமைப்பபச் சார்ந்த டன்ஸ்ரன், சிவா, விஜய் ஆகியோருடன் கறுப்பி செய்திருந்த நேர்காணலிலும் (இணைப்பு ) இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.  எனவே இனிவரும் காலங்களிலாவது நாம் ஓரினச் சேர்க்கையாளர், தன் பால் புணர்ச்சியாளர் போன்ற சொற்களைப் பாவிப்பதை பிரக்ஞை பூர்வமாகவே தவிர்க்கவேண்டும்.
 

தவிர கட்டுரையில் இன்னோர் இடத்தில் தேவகாந்தன் குறிப்பிடுகிறார்

“தற்பால் திருமணத்தை அங்கீகரித்த நாடுகளில் இரண்டாவது கனடா.  அது நல்லது.  அந்தளவுதான் அந்த விவகாரத்தில்.  சமூக அக்கறை அதை எதிர்க்கிற அளவு செல்ல வேண்டியதில்லை.  அதை தனி மனிதர்களின் விருப்புச் சார்ந்த ஒரு விஷயம் மட்டுமாக எடுத்துக் கொண்டு ஒதுக்கி வைப்பதுதான் விவேகம்.”

இந்தக் கூற்று முழுக்க முழுக்க ஆட்சேபத்துக்குரியது.  முதலில் கனடா தற்பால் திருமணத்தை அங்கீகரித்த நாடுகளில் இரண்டாவது மட்டுமே என்பதாலும், நிறைய உலக நாடுகளில் அது அங்கீகரிக்கப்படாத ஒன்றாயும், சில நாடுகளில் சட்டவிரோதமாயும் இருக்கின்றது என்பதாலும் நாம் தற்பால் விழைவோரின் திருமணம் செய்யும் மற்றும் இதர உரிமைகளையும் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது.  கனடாவையும் தற்பால் திருமணங்களை அங்கீகரித்த பிற நாடுகளையும் (http://en.wikipedia.org/wiki/Same-sex_marriage ) முன்னுதாரணமாய்க் கொண்டு பிற நாடுகளிலும் இது போன்ற உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்ற வாதத்தை முன்வைக்கவேண்டுமே தவிர பல நாடுகளில் இவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதைக் காரணம் காட்டி இவர்களை ஒதுக்குவது முறை அன்று.  சவூதி அரபியாவில் இன்றுவரை பெண்கள் வாகனம் செலுத்த அனுமதி கிடையாது.  எத்தனையோ நாடுகளில் பெண்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஓட்டுரிமையும் கிடையாது.  கட்டுரையில் தேவகாந்தன் தான் ஏற்றுக்கொள்வோராய்க் குறிப்பிட்டிருக்கின்ற மூன்றாம் பாலினர் கூட பெரும்பான்மையான நாடுகளில் இன்னமும் முழுக்க முழுக்க அங்கீரிக்கப்பட்டவர்கள் அல்ல.  எனவே உலக நாடுகளால் அங்கீகாரம் கிடைகின்ற மட்டத்தையே அளவு கோலாக்கி எம் கணிப்புகளை முன்னெடுப்பது முறையானதன்று.
 

அது போலவே கட்டுரையின் நிறைவுப் பகுதியில் தேவகாந்தன் குறிப்பிடுகின்ற கருத்துக்களும் எந்த விதத்திலும் ஏற்புடையதன்று.

“அது விபச்சாரம் போல மிகப் புராதனமானது.  சுயவின்பத் திருப்திப்படுத்தல் போல உயிரின இயல்பானது.  ஆனாலும் விபச்சாரத்தில் ஒரு சமூக நீதியின் கூறு ஒட்டிக் கொண்டிருக்கும்.  சுயவின்பதாரியிடம் தேக, மன அடக்குதல்களின் விடுபடுதல் என்ற முத்திரை இருக்கும்.  தன் பாற் புணர்ச்சியாளரிடத்தில் மனோவிகாரத்தின் கூறு மட்டும் காணக் கிடைக்கும்.
வெற்றிலை, புகையிலை, கள்ளு வரைக்கும் விகல்பம், கஞ்சாவும் அபினும் இடைநிலை, மறுப்பதற்கும் ஒத்துக்கொள்வதற்குமான நிலை, அது போல கொக்ஹேயினும், ஹெரோயினும் கருதப்படுவதில்லை”

என்கிற இந்தக் கருத்து ஒரு சாராரின் வாழ்க்கைத் தேர்வுகளை, பாலியல் தேர்வுகளை சர்வ சாதாரணமாக புறக்கணித்துத் தீர்ப்பெழுதி நகர்கின்றது.  கட்டுரையின் இறுதி வசனமாக “இதற்கு மேலே இச்சைகளின் கடும்கூத்தை, அதை இச்சிப்பதற்கான முயற்சிகளை வக்கரித்ததாய் நிராகரிக்க ஒரு பொது ஜனத்துக்கு நிராகரிக்க எப்போதும் உரிமை உண்டு” என்கிறார்.  தாம் சரியென்று கருதுவதை வெளியிடுகின்ற உரிமை பொது ஜனத்துக்கு இருக்கின்றபோது அது இன்னொரு சாராரின் இருப்பையே கேலி பேசுவதாகவோ அல்லது இருப்பையோ நிராகரிப்பதாயோ இருந்துவிடக்கூடாது என்பதும் முக்கியமானது.  அந்த வகையில் நான் அதிகம் மதிக்கின்ற எழுத்தாளர்களில் ஒருவரான தேவகாந்தனின் இந்தக் கட்டுரை மிகப் பெரிய ஏமாற்றமே. 



7 thoughts on “தற்பாலினர் குறித்து தேவகாந்தன் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை – அருண்மொழிவர்மன்

Add yours

  1. நல்லதோர் எதிர்வினை, இது குறித்த தெளிவான விளக்கம் நிச்சயம் பெறப்படவேண்டும். அத்துடன் தாய் வீடு பத்திரிகையே இதைப் பிரசுரித்து, விவாதத்துக்கான களம் அமைத்துக் கொடுத்தல் நல்லதாக அமையும், இல்லையேல் ஒரு பொதுத்தளத்தில் விவாதிக்க வேண்டியதும் கூட. //தாம் சரியென்று கருதுவதை வெளியிடுகின்ற உரிமை பொது ஜனத்துக்கு இருக்கின்றபோது அது இன்னொரு சாராரின் இருப்பையே கேலி பேசுவதாகவோ அல்லது இருப்பையோ நிராகரிப்பதாயோ இருந்துவிடக்கூடாது என்பதும் முக்கியமானது. அந்த வகையில் நான் அதிகம் மதிக்கின்ற எழுத்தாளர்களில் ஒருவரான தேவகாந்தனின் இந்தக் கட்டுரை மிகப் பெரிய ஏமாற்றமே. //ஏமாற்றந்தான்..!!

    Like

  2. இளங்கோ வீட்டில் தாய்வீடு பத்திரிகையில் மே.ப. கட்டுரையை வாசிக்கும்போது தொலைபேசி உறுமியது. அருண்மொழிவர்மனிடமிருந்து பெட்டி பெட்டியாகத் தகவல் என்றதும் என்னவாக இருக்கும் என்பது புரிந்து போனது. அதற்காக நான் கோர்த்து வைத்திருந்த எண்ணங்களை மண்டைக்குள் நுழைந்து எடுத்துவிட்டது போல் எதிர்வினை எழுதினால் நாங்கள் எங்கே போவது :)) அதுவும் ‘தற்பால் சேர்க்கையாளர்கள்’ என்ற சொல்லையே அருவருப்புடன் பாவிக்கிற நிலையில் ‘தன்பால் புணர்ச்சியாளர்கள்’ என்ற சொல்லை தேவகாந்தன் சர்வசாதாரணமாகக் கையாண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது//கடந்த மாதம் (கார்த்திகை, 2010 ) 19ம் திகதி மாலையில் ஒரு வட்ட நண்பர்களாலும், அதற்கு அடுத்தடுத்த இரு நாள்களிலும் ‘பன்முக வெளி’யை நடாத்திய நண்பர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்களில், தன்பால் புணர்ச்சியாளர் குறித்த விவகாரம் விசாரிப்புச் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டங்களாதலால் செல்லுவதாக எனக்குத் திட்டமிருந்தது. கடைசியில் முடியாது போனது///அந்த முதல் வரிகளே குத்திச் சொல்கின்றன அருண்மொழிவர்மரே, இதற்கான எதிர்வினையாற்றுவதற்கான ‘எங்களது’ தார்மீகப் பொறுப்பை.

    Like

  3. அடிப்படையில் தற்பாலினர் மீதிருக்கிற விருப்பமின்மையின்/ஒவ்வாமையின் கூறுகள் அவரது கட்டுரையில் புலப்படுகிறது, எதிர்வினைக்கும் பகிர்வுக்கும் நன்றி அருண். எவ்வளவு விசயத்தை வாசிக்க இருக்கப்பா 🙂

    Like

  4. நன்றிகள் மயூ,//இது குறித்த தெளிவான விளக்கம் நிச்சயம் பெறப்படவேண்டும். அத்துடன் தாய் வீடு பத்திரிகையே இதைப் பிரசுரித்து, விவாதத்துக்கான களம் அமைத்துக் கொடுத்தல் நல்லதாக அமையும், இல்லையேல் ஒரு பொதுத்தளத்தில் விவாதிக்க வேண்டியதும்//உண்மைதான். தாய்வீட்டிற்கு மேற்படி ஆக்கத்தை அனுப்பி வைத்துள்ளேன். அவர்கள் பதிப்பிப்பார்களா தெரியாது. தற்பாலினர்கள் பற்றி சரியான புரிந்துணர்வு மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவேண்டியதற்கும், எம்மை நாமே சுய விமர்சனம் செய்வதற்கும், தமிழில் தற்பால் உறவுகள் குறித்து சொற்களுக்கு இருக்கின்ற பற்றாக்குறை மற்றும் அந்தச் சொற்களில் புதைந்துள்ள அரசியல் பற்றியும் பேச வேண்டிய தேவைகள் மிக அதிகம் இருக்கின்றன

    Like

  5. எதிர்வினைக்கு மிக்க நன்றி. நான் அவரது தளத்திலே எனது எதிர்வினையாற்றினேன். அது கீழே.ஒரு மூத்த மிக சிறந்த இலக்கியவாதியின் கட்டுரையாக உங்கள் கட்டுரை தோன்றவில்லை.எந்த வகையிலும் இது சமூக அக்கறையை விட தனி மனித அனுமானங்களால் எழுதப்பட்ட கட்டுரை போலவே எனக்கு தோன்றுகிறது.தனி மனித வக்கிரமாக தன்பால்விழைவை குறிப்பதற்க்கு முன்னால் அதன் உயிரியல்/மனோதத்துவ கூறுகளை கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள மெனக்கெட்டீர்களா?பொதுப்படையாக அதிர்வான வாழ்க்கை முறை என முன்வைக்கும் போது அது என்ன என குறிப்பிடாமல் போவது எப்படி ஒரு நல்ல சமூகவியற் ஆய்வாகும்?உங்கள் தனிப்பட்ட வாழ்வனுபவம் தன்பாலினரின் சில தவறான வாழ்க்கை முறையை கண்டு அமைந்திருக்கலாம். ஆனால் அதை சமூக சிந்தனையாக முன்வைக்கும் போது அதனை தீவிர ஆய்வுக்கு பின் தானே ஒரு பொறுப்பான இலக்கியவாதியாக முன் வைக்க வேண்டும். இப்படி பொத்தாம் பொதுவாக தீர்ப்பு வழங்கினால் எப்படி? உங்கள் கட்டுரை ஒரு நியாயமான விவாதத்திற்க்கு கூட இடமளிக்காமல் இறுதி முடிவாக முடிகிறதுஉங்களுக்கு பிடித்த இசை கலைஞர்கள் தன்பாலினர் என தெரிந்த மாத்திரத்தில் உங்கள் மனமுடைகிறது என்றால் உங்களிடம் தனிப்பட்ட உளவியல் ஒவ்வாமை தன்பால் விழைவின் மேல் இருப்பது புரிகிறது. அப்படியிருக்க அதையே இக்கட்டுரையின் தனி மனித சார்பற்ற சமூக அக்கறைக்கான காரணமாக முன்வைப்பது அபத்தமாகவே தோன்றுகிறது.இன்னும் இன்னும் என சொல்ல நிறைய உள்ளது. இக்கட்டுரை யாரோ ஒருவரால் எழுதப்பட்டிருந்தால் மற்றுமொரு கட்டுரை தான்.ஆனால் நவீன இலக்கியத்தின் முக்கிய ஆளுமையிடமிருந்து வந்திருப்பது இக வருந்தத்தக்கது.அத்தகு ஆளுமையை நான் விமர்சிக்கும் அளவு சங்கடமான நிலைமை இன்னும் உள்ளார்ந்த வருத்தமளிக்கிறது

    Like

  6. @ராஜரத்தினம்மிக விரிவான பின்னூட்டத்திற்கு நன்றிகள்தேவகாந்தன் எனக்கும் மிக பிடித்த ஒரு படைப்பாளி, அதேநேரம் அவரிடம் இருந்து இப்படியான ஒரு கட்டுரையையும், நிலைப்பாடையும் நான் எதிர்பார்க்கவில்லை. தவிர ஒரு கசப்பான உண்மை என்னவென்றால் தமிழில் படைப்பாளிகளில் பலர் இது போன்ற சமூக விடயங்களில் மோசமான நிலைப்பாடையே எடுக்கின்றனர்…….

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: