சிறுவயதில் எனக்கும் கொமிக்ஸ் புத்தகங்கள் பெரும் ஈர்ப்பாக இருந்தன. ராணி கொமிக்சின் முதல் 200 இதழ்கள் வரை சேர்த்து வைப்பதை ஒரு திட்டமாக நானும் சிறுவயது நண்பன் பிரசன்னாவும் சேர்த்து வைத்திருந்தோம். 200வது ராணி கொமிக்ஸ் “யானைப் பையன்”. ஆனால் யாழ்ப்பாணத்தில் அது வர முன்னரே 201வது இதழ் வெளியாகியிருந்தது. எமக்கு அப்போது 13 வயது. எம்மிடையே, 200வது இதழில் மாயாவி இறந்துவிடுவதால் தான் அதை வெளியிடவில்லை என்று ஒரு வதந்தி பரவியும் இருந்தது.
ஆனால் அதே பதின்மூன்று வயதளவிலேயே வயதில் கொமிக்ஸ் பற்றிய ஈர்ப்பும் இல்லாது போய்விட்டது. அதன் பிறகு ஓ/எல் படிக்கின்றபோது இரத்தப்படலம் என்கிற ஒரு கொமிக்ஸ் பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பியிருந்தது. தன்னைத் தானே தேடியலைகின்ற தனிமனிதனின் கதை என்கிற சிறு தலையங்கத்துடன் வெளியான அதன் அட்டையே எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருந்தது. அனேகம் நான் ஆவலுடன் தேடித் தேடி வாசித்த கடைசி கொமிக்ஸ் அது தான். நண்பன் தயா அதை வாசித்துவிட்டு வந்து விசாகன் வீட்டு மரத்தடியில் ஒரு மாலைப்பொழுது முழுவதும் கதையையும் ஓவியங்கள் பற்றியும் சொல்லிக்கொண்டே இருந்தான்.
எமது பள்ளிக்கால நண்பன் பிரதீப்பும் குகப்பிரசாதன் என்கிற நண்பனும் இணைந்து நாம் பத்தாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கின்றபோது பனிமலர் என்கிற ஒரு சிறுவர் கதை ஒன்றை வெளியிட்டனர். அதில் பிரதீப் வரைந்த சில ஓவியங்களும் இருக்கும். போர் உச்சத்தில் இருந்த, பொருளாதாரத் தடை இருந்த மின்சாரம் இல்லாத அன்றைய யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த சிறு நூல் அது. உண்மையில் மிகப்பெரிய முயற்சி. பின்னர் அதுபோல கொமிக்ஸ் புத்தகங்களில் ஆங்கில எழுத்துகளை எல்லாம் அடித்துவிட்டு தமிழால் எழுதி “தங்கப்பூ மர்மம்” என்கிற பெயரில் தயாரித்திருந்தனர். அது புத்தகமாக வெளியானதா என நினைவில் இல்லை. பிரதீப் நல்லதோர் கார்டூனிஸ்ட். இப்போதும் அந்த துறையுடன் தொடர்புடையதாகவே அவன் பணி இருக்கின்றது. கொமிஸ் மீதான அவன் காதலும் இப்போதும் தொடர்கின்றது.
ஈழத்தில் இருந்தும் சில கொமிக்ஸ் முயற்சிகள் நடைபெற்றாலும் அவை வெற்றி பெறவில்லை அல்லது போதிய ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால் இலங்கைக் கொமிக்ஸ் வாசகர்கள் என்று பெரிய கூட்டமே இருக்கின்றது. முகநூலில் உள்ள கொமிக்ஸ் வாசகர் வட்டத்தின் பக்கம் கீழே இணைக்கப்பட்டுள்ளது
Tamil Comics Srilanka Facebook Page
டிஸ்கவர் புக் பலசில் நடந்த நிகழ்வொன்றில் மருது ஆற்றிய உரையை அண்மையிலேயே பார்க்கக் கிடைத்தது. கொமிக்ஸ் உலகின் வரலாறு, அதை வரையும் கலை பற்றிய மருதுவின் இந்தப் பேச்சு முக்கியமான ஒரு ஆவணம். இது போன்ற ஆவணங்கள் பரவவும் கவனிக்கப்படவும் வேண்டும்.
அருமை
LikeLike