இந்த ஆவணப்படத்தினை முன்வைத்து சில விடயங்களை முக்கியமாகக் கவனப்படுத்தவேண்டும் என்று கருதுகின்றேன். இந்த ஆவணப்படமானது இந்தியச் சூழலை (தமிழ்நாட்டுச் சூழலை) மையமாக வைத்து உரையாடலை முன்வைக்கின்றது. இதனைப் பார்க்கின்ற நாம் இந்தியச் சூழலில் மலம் அள்ளும் தொழிலாளர் மற்றும் சாதிய ஒடுக்குமுறைகள் என்கிற புரிதலோடு என்று படம் பார்ப்பதாகக் கடந்துபோய்விடக் கூடாது, நாம் இவற்றை, இலங்கைச் சூழலிலும், புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் என்ற வகையில் கனடியச் சூழலிலும் தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டும். இது நமக்குப் புறம்பான பிரச்சனை அல்ல, இது வெவ்வேறு வடிவங்களில் ஈழத்துச்சூழலிலும், புலம்பெயர் நாடுகளிலும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற ஒடுக்குமுறை. இந்த ஆவணப்படம் முக்கியமாக 4 விடயங்களைக் குறிப்பிடுகின்றது. அவையாவன
- சாதிய ஒடுக்குமுறைகள்
- பெண்கள் மீதான சுரண்டல்கள் சாதிய ஒடுக்குமுறைக்கு மேலதிகமாக தொழிற்படும் விதம்
- அடிமட்டத் தொழிலாளர்களின் நலன்கள் எவ்விதம் பாதிக்கப்படுகின்றன என்கிற விடயமும் வேலை நேரங்களில் அவர்கள் எவ்விதம் எதுவிதப் பாதுகாப்பும் இல்லாமலும் இருக்கின்றார்கள் என்பது தொடர்பான கவனயீர்ப்புகளும்
- சூழலியல் சார்ந்த சமகாலப் பிரச்சனைகள்
இவை பற்றிய அனைத்துத் தரப்பு மக்களின் கரிசனைகளையும் உள்வாங்கிக்கொண்டே இந்த உரையாடலை ஆரம்பிக்கவேண்டும் என்று கருதுகின்றேன். இந்த ஆவணப்படத்தினை உள்வாங்கிக்கொண்டு நாம் எமது சூழலைப் பொருத்தி எமது உரையாடல்களை முன்னெடுக்கவேண்டும். ஓர் உதாரணமாக எம்மில பலரும் துப்புரவுத் தொழிலாளர்களாக புலம்பெயர் வாழ்வில் வேலைசெய்திருக்கின்றோம். அவ்விதம் வேலை செய்கின்றபோது இந்தப் பணிக்காக வழங்கப்படும் பணமும் அதில் ஒப்பந்தகாரர் பெற்றுக்கொள்ளுகின்ற பணம், அவர் தொழிலாளர்களுக்கு அதாவது தனக்குக் கீழ்நிலை அல்லது அடுத்த நிலை ஒப்பந்தகாரருக்கு என்று பிரித்து வழங்குகின்ற தொகைப் பணம் என்று ஒப்பிட்டுப் பார்த்தால் அவர் தனக்காக தரகுப் பணமாக எடுத்துக் கொள்கின்ற பணம் தொழிலாளர்கள் அதாவது தனக்குக் கீழ்நிலை அல்லது அடுத்த நிலை ஒப்பந்தகாரர்கள் பெறுகின்ற பணத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது நியாயமேயில்லாத கொள்ளை என்று எளிதல் புரியும். இங்கே இந்த வேலைகளை செய்பவர்களுக்கான Job Discription என்கிற என்ன வேலை செய்யவேண்டும் என்று வழங்கப்படும் ஒப்பந்தப் படிவத்துக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படுகின்றதா என்பது முக்கியமான கேள்வி. பொதுவாக துப்புரவுத் தொழில்களில் ஈடுபடும் பலரும் தாம் அறிந்துகொண்ட இலகுவாக வேலை செய்கின்ற உத்திகள், தமது வேலைகளுக்காக தமது தாய் தந்தையர், மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரையும் உள்வாங்குவதன் மூலமே வேலைகளை வேகமாகச் செய்துமுடிப்பவர்களாக இருக்கின்றனர். இவர்கள் எல்லாரது உழைப்பையும் கணக்கிட்டுப் பார்த்தால் ஈட்டப்படுகின்ற வருமானது கனடாவில் நிர்ணயிக்கப்பட்ட மணித்தியால சம்பளத்தை விட மிகக் குறைவாக இருப்பது நாம் எல்லாரும் அறிந்ததே. ஈழத்துச் சூழலை எடுத்துக்கொண்டால், அங்கு துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் இதர கூலித் தொழிலாளர்களுக்கு என்னவிதமான பாதுகாப்புகள் இருக்கின்றன, அவர்களது உரிமைகள் எவ்விதம் பாதுகாக்கப்படுகின்றன என்பது பற்றியும் அக்கறையுடன் உரையாடவேண்டிய தருணம் இது. நாம் வாழும் சமகாலத்தில் நமது சூழலில் எவ்விதமான ஒடுக்குமுறைகள் நிலவுகின்றன, அவை எவ்வாறு நுட்பமாகச் செயற்படுகின்றன என்கிற உசாவலினை மேற்கொள்வதற்கு இதுபோன்ற ஆவணப்படங்கள் தூண்டுதலாக அமையவேண்டும்; அத்துடன் சாதியம், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் எவ்விதம் தொழிற்படுகின்றன என்று உணர்ந்து அவற்றுக்கு எதிராகவும் நாம் போராடவேண்டும். அவையே இத்திரைப்படத்தின் உண்மை நோக்கினை ஈடேறச் செய்வதாக அமையக்கூடும்.
அந்த விதத்திக் கக்கூஸ் திரைப்படம் மிக முக்கியமான கடமையைச் செய்திருக்கின்றது. இப்படத்தினை இயக்கிய திவ்யாவிற்கும், திரைப்பட உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும் நன்றி.
இந்த ஆவணப்படத்தினை யூட்யூப்பில் பார்ப்பதற்காக முழுவதுமாக உத்தியோகபூர்வமாகவே பகிர்ந்துள்ளார்கள், அதனையும் இங்கே பகிர்ந்துகொள்கின்றேன்.
பின்குறிப்பு:
யூன் 25, 2017 அன்று ரொரன்றோவில் Scarborough Village Recreation Centre
(3600 Kingston Road) இல்தேடகம் அமைப்பின் அனுசரணையுடன் இத்திரைப்படத்தினை காட்சிப்படுத்தியிருந்தோம். அந்தத் திரையிடலின் பின்னர் உரையாடலை ஆரம்பிக்குமுன்னர் பேசிய சிறு உரையினை இங்கே பகிர்ந்துள்ளேன்)
இந்தத் திரையிடலின் தொடர்ச்சியாகப் பார்க்ககூடிய செய்திப் பதிவொன்று https://sabrangindia.in/article/where-outrage-when-39-indians-die-100-days-while-cleaning-sewers
Leave a Reply