எஸ்பொ பற்றி ஒரு நனவிடை

Tamil_Writer_S_Poமுற்குறிப்பு : சென்றவாரம் வழமைபோலவே கடைசிநேரத்தில் வாராந்த யாழ் உதயனுக்கான கட்டுரையை எழுதிக்கொண்டிருந்தபோது முகநூல் உரையாடல் மூலம் இடைவெட்டிய நண்பர் கற்சுறா “எஸ்பொ அதிக நாள் தாங்கமாட்டார் என்று செய்தி கிடைத்திருப்பதாகக் கூறினார். அதன்பிறகு அன்றைய கட்டுரையை மனமொருமித்து எழுதமுடியவில்லை. மனம்பாரமான வழமையான பொழுதுகளில் செய்வதுபோலவே மலேசியாவில் இருக்கின்ற நண்பன் விசாகனை அழைத்து சிறிதுநேரம் பேசிவிட்டு உறங்கிவிட்டேன். மறுநாள் வேலையில் விடுப்பு, தூங்கி எழுந்தால் தொலைபேசியில் குறுஞ்செய்தி காத்திருந்தது. தேவகாந்தன் அனுப்பியிருந்தார், “EsPo expired two hrs ago” என்று.

எஸ்பொ எனக்குள் செலுத்திய தாக்கம் அதிகம். ஆயினும் அவருடன் நெருக்கமான உறவு எனக்குக் கிடையாது. ஒரு வாசகனாக அவருடனான/அவர் பற்றிய என் பரிச்சயத்தை நான் முன்னர் பதிவாக்கியிருந்த இரண்டு குறிப்புகளையும் இத்துடன் பகிர்ந்துகொள்ளுகின்றேன்.

எஸ்பொ நனவிடை தோய்தல்

யூலை 7, 2012

இயல்விருது பெறுவதற்காக கனடா வந்திருந்த எஸ்பொவுடனான விருது வழங்கும் விழாவிற்கு அடுத்த நாள் நடைபெற்ற காலம் செல்வம் ஒழுங்கு செய்திருந்த “எஸ்பொ நனவிடை தோய்தல்” என்கிற சந்திப்பொன்றிற்குச் சென்றிருந்தேன். நிறைய எழுத்தாளர்கள் அவர்கள் எழுத்தினூடாக அவர் எப்படி இருப்பார் என்று தோன்றுகின்ற விம்பம் போல இருப்பதில்லை. ஆனால் எஸ்போ, அவர் எழுத்துகளூடாகத் தெரிவது போன்ற கலகம் செய்யும் இயல்புடையவராகவே தெரிந்தார். சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு, தமிழ் தேசியம், மகாவம்சம் என்று நிறைய விடயங்களைத் தொட்டுத் தொட்டுப் பேசினார். அதே நேரம் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்திக் கூறும்போது சிங்களவர்கள் பற்றிக் கூறிய சில கருத்துக்கள் மிகுந்த ஏமாற்றத்தையே தந்தன. இது போன்ற பேச்சுக்களை எஸ்பொ போன்ற அனுபவமும் ஆளுமையும் நிரம்பிய ஒரு மூத்த எழுத்தாளரிடம் இருந்து எதிர்பார்க்கவேயில்லை.  சடங்கு, தீ போன்ற படைப்புகளூடாக பாலியல் பற்றி மக்களிடையே இருந்த, பாலியலைப் பேசக் கூடாத ஒன்றாக கருதும் மனப்பாங்கை உடைத்துப் போட்ட எஸ்பொ, “கற்பு நிலை” பற்றிப் பேசியதும், ஆதியிலே தமிழராக இருந்தவர்கள் பின்னர் சிங்களவர்களாக மாறியதற்குக் காரணம் கூறும்போது “சிங்களப் பெண்கள் கற்பு நெறி பிறழ்ந்ததும் ஒரு காரணம்” என்று கூறியதும் மிகுந்த ஏமாற்றத்தையே தந்தன. அதே நேரம் நிறைய விடயங்களில் எஸ்பொ ஒரு ரசிக மனநிலையுடனேயே என்னால் ரசிக்க முடிந்தது என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும்.

தனது உரையின் ஆரம்பத்தில் முதல்நாள் இயல் விருது வழங்கும் விழாவில் பேசுவதற்குக் கூறப்பட்டிருந்த “ஒழுக்க விதிகள்” பற்றிக் கிண்டலடித்து தன்னைக் காட்டான் என்றும், இங்கே எப்படியும் பேசலாம் என்று கூறிக்கொண்டே பேசிய எஸ்பொ, தனது கருத்துக்களையும் அரசியலையும் நேரடியாகவும் ஆணித்தரமாகவும் முன்வைத்தார். இது பற்றிய முழு ஒலிப்பதிவும் இருப்பதால் அதையும் இந்தப் பதிவுடன் இணைக்கின்றேன்.

இதே நிகழ்விலேயே ஆபிரிக்க இலக்கியங்களுடன் தமிழர்களுக்கு கலாசார ரீதியில் இருக்கின்ற தொடர்புகளைக் குறிப்பிட்ட எஸ்பொ ஐந்து ஆபிரிக்க எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்த புத்தகங்களின் வெளியீடும் எந்த சம்பிரதாயமும் இல்லாமல் நடைபெற்றது. இந்த ஆறு புத்தகங்களுடன் எஸ்பொ கவிதை நடையில் எழுதிய காமசூத்திரம் நூலும் சேர்த்து ஒரு தொகுதியாக விற்கப்பட்டது. இதனைக் குறிப்பிட்ட எஸ்பொ, தான் லேகியம் விற்பவனைப்போல தனது படைப்புகளைத் தானே விற்பனை செய்வதாகத் தன்னைத் தானே கேலி செய்யவும் தவறவில்லை. எஸ்பொவின் இயல் விருது ஏற்புரைப் பேச்சு மிகச் சிறப்பாக இருந்தது என்று நண்பர்கள் கூறியபோதும் அந்த விழாவிற்குச் செல்லாததால் அதனைக் கேட்கமுடியவில்லை. மறுநாளே அதற்குப் பரிகாரமும் கிடைத்தது போல அமைந்தது இந்த நிகழ்ச்சி.

 

நான் ஒரு படைப்பாளியல்ல; பாணன் – எஸ். பொ
யூன் 19, 2011
ஈழத்துப் படைப்பாளிகளும் முக்கியமானவர்களுள் ஒருவரும் எனக்குப் பிடித்தவருமான எஸ் பொவிற்கு இவ்வாண்டு இயல் விருது வழங்கப்படவிருப்பதாக அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். இயல்விருது பற்றிய விமர்சனங்கள் நிறைய இருந்தபோதும் இவ்வாண்டுக்குரிய இயல்விருது எஸ்பொவிற்கு வழங்கப்பட்டிருப்பதன் காரணமாக எஸ்பொவை காணும் வாய்ப்புக் கிட்டியிருப்பது குறித்தும் மகிழ்ச்சியே. அண்மையில் எஸ்பொ கனடா வருகின்றார் என்று அறிந்ததும் அதற்கிடையில் அவரை முழுமையாக வாசிக்கவேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது.  ஆனாலும் அதே நேரத்தில் அவரது புத்தகங்கள் முழுமையாகக் கிடைக்காமையாலும், நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் காலத்தின் தேவை கருதி வேறு சில புத்தகங்களை தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருந்ததாலும் துரதிஸ்டவசமாக எஸ்பொவை அவரது கனேடிய வருகையின்போதும் முழுமையாக வாசிப்பது என்பது சாத்தியமில்லாதது ஆகிவிட்டது. அதே நேரம் எஸ்பொ எழுதியவற்றில் நான் வாசித்தவற்றைப் பற்றி சில குறிப்புகளை இங்கே பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

சடங்கு

சடங்கு என்கிற எஸ். பொ எழுதிய நாவலை சில காலங்களிற்கு முன்னர் மீண்டும் ஒரு முறை வாசித்திருந்தேன். கலாசாரம், புனிதம் என்றெல்லாம் கட்டியமைக்கப்பட்டு, கட்டியழுது கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தில், அதிலும் யாழ்ப்பாணச் சமூகம் பற்றிய இந்நாவலுக்குரிய சாத்தியம் பேரதிசயம் தான். அதிலும் குடும்பம் என்ற கட்டி எழுப்பப்பட்ட ஓர் அமைப்பை முதன்மைப்படுத்தி, தனி நபர் ஆசாபாசங்களை முக்கியப்படுத்தாமல் தியாகம், விட்டுக் கொடுத்தல், புனிதம் என்றெல்லாம் பேசப்படும் சமூகங்களில், குடும்ப உறவுகளைப் பேணவும், குடும்பத்தை நிலைப்படுத்தவும் (முக்கியமாக பண ரீதியில்) எடுக்கும் முயற்சிகளில் தனி மனித உணர்வுகளும் விருப்பங்களும் எப்படி நிராகரிக்கபடுகின்றன என்று சொல்கிறது சடங்கு கதை.

செந்தில்நாதன் என்கிற குடும்பத் தலைவர் மனைவியையும், ஐந்து பிள்ளைகளையும், மனைவியின் தாயாரையும் பராமரிக்க வேண்டும் என்பதையே கருத்தாகக் கொண்டு கொழும்பில் இருந்து கடுமையாக உழைத்து வருகிறார். குடும்பம் மீது தீராத காதலும், மனைவி மீது அடங்காத காமமும் கொண்ட செந்தில்நாதன் தனக்குக் கிடைக்கும் பணத்தைக் குடும்பத்திடம் சேர்க்க யாழ்ப்பாணத்துக்கு வருகிறார். இது வெளியில் சொல்லும் காரணம் என்றாலும், தன் காமம் தீர்க்க ஒரு வடிகால் கிடைக்கும் என்ற எண்ணமும் ஒரு காரணம். (காமம் பெருகக் காரணம் பணம் கிடைத்த மகிழ்ச்சியில் அவர் பார்த்த ஓர் ஆங்கிலப்படத்தில் வரும் காட்சி). மாறாக தன் விடுமுறையை நீட்டித்தும் கூட அவரால் ஒரு நாள் கூட மனைவியுடன் கூட முடியவில்லை. கூட்டுக் குடும்பம், தியாகம் என்று திணிக்கப்பட்ட கற்பிதங்கள் எப்படி தனி மனித வாழ்வின் இயல்பு நிலையையும், சந்தோஷங்களையையும் நிராகரிக்கின்றன என்று சொல்லும் கதையூடாக அவ்வப்போது நடுத்தர வர்க்க மக்கள் பற்றிய நக்கல்களும் யாழ்ப்பாணத்து மனநிலை பற்றிய கேலிகளுமாக கதை செல்கின்றது.

வெளியில் செல்லும் செந்தில்நாதன் குடித்து விட்டு வருகிறார். செந்தில்நாதன் கொழும்பில் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று குடிப்பது இல்லை. ஊரில் கூட சந்தர்ப்பமும் ஓசிச் சரக்கும் கிடைத்தால் மட்டுமே குடிப்பவர் (இதைத்தானே நடுத்தர வர்க்க மனநிலை என்பார்கள்). கூடலுக்கான எதிர்பார்ப்புடன் அவரைத் தேடிவரும் மனைவி, அவர் சத்தி எடுத்துவிட்டுப் படுத்திருப்பதைப் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்புகிறாள் (நடுத்தர வயதே ஆனபோதும், மற்றவர்கள் பார்த்தால் மரியாதை இல்லை என்பதற்காக செந்தில்நாதனும் மனைவியும் ஒரே அறையில் படுப்பதில்லை). இந்த நேரத்தில் தாபத்துடன் அவர் மனைவி சுய இன்பம் செய்வதாக எழுதுகிறார் எஸ், பொ. அது போலவே கொழும்பில் செந்தில்நாதனும் சுய இன்பம் செய்வதாக வருகிறது. இந்தக் கதை எழுதப்பட்டது 60களில் என்று அறியும்போது ஆச்சரியமாக இருக்கின்றது.

சடங்கு நாவலைப் பற்றிய குறிப்பினை நான் முன்னர் ஒரு முறை வலைப்பதிவில் எழுதி இருந்தபோது தொடர்புகொண்ட காலம் செல்வம், இந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகக் கூறியிருந்தார். அதன் பின்னர் அது பற்றி எதுவுமே நான் கேள்விப்படவில்லை. குறிப்பிடப்பட்டது போல ஆங்கில மொழிபெயர்ப்பு பொருத்தமான மொழி பெயர்ப்புடன் வரும்போது அது ஈழத்து இலக்கியத்தின் முக்கியமான சாதனைகளில் ஒன்றை பரவலாக அறிமுகம் செய்துவைக்க அதிகம் தோதாக அமையும்.

 

தீ

எஸ்பொவின் தீ மனிதனின் அடிப்படை உணர்ச்சியும் உறவுகளின் அடிப்படையும் காமத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கின்றது என்பதை தத்துவ நோக்கில் (ஆழமாக இல்லாத விடத்தும்) அதே நேரம் ஒரு நாவல் வடிவில் சொல்கின்ற படைப்பாகும். கதையில் கதையின் நாயனுக்கு அவன் வாழ்வில் சந்திக்கின்ற 7 பேருடன் பாலுறவின் அடிப்படையிலான தொடர்பு உருவாகின்றது. (இதில் சிறு வயதில் பாதிரியார் ஒருவரால் அவன் பாலியல் தேவைகளுக்காக அறிந்தும் அறியாமலும் பலியாக்கப்படுவதும், பின்னர் அவனே பூப்பெய்தாத சிறுமியை தனது தேவைகளுக்காக பலியாக்க முயல்வதும் உள்ளடக்கப்பட்டுள்ளது. கலாசாரம் பண்பாடு என்ற போர்வைகளில் வெளிப்படுத்தப்படாது ஈழத்தில் நான் சிறுவனாக இருந்த காலத்திலே கூட நிறையப் பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கின்றேன். எமது சக மாணவன் ஒருவன் அப்போது மாணவ முதல்வனாக இருந்த ஒருவனால் மாணவ முதல்வர்களுக்கான அறையில் வைத்து சுயமைதுனம் செய்யக் கட்டாயப் படுத்தப்பட்டான் என்பதை எமது வகுப்பில் அனேகம் பேர் அந்நாட்களில் அறிந்தே இருந்தோம். எனினும் பயம் காரணமாகவும், வெட்கம் காரணமாகவும் இது பற்றிப் பெரிய அளவில் பேசப்படவில்லை என்பதே உண்மையாகும். ஆனால் 1957 களிலேயே இது பற்றி எஸ்பொ எழுதி இருக்கின்றார் என்பதை அறியும் போது வியப்பாகவே இருக்கின்றது. இந்த ஏழு பேருடனும் கதை நாயகனுக்கு இருக்கின்ற உறவும், உணர்ச்சிகளும் வேறுபட்டிருப்பதும் கதாபாத்திரம் பார்க்கின்ற கோணங்களும் பார்வைகளுமே கூட வேறுபட்டிருப்பதும் முக்கிய அவதானங்களாகும்.

பனிக்குள் நெருப்பு

2006ல் புதுவைப் பல்கலைக்கழகத்திலே நடைபெற்ற கூட்டம் ஒன்றிலே இரண்டு அமர்வுகளாக புலம் பெயர்ந்தோர் இலக்கியம் என்ற பெயரில் எஸ்பொ பேசியவற்றின் எழுத்துவடிவிலான தொகுப்பே பனியும் என்கிற இந்த நூலாகும். 1990ல் சிட்னியில் இலங்கை அகதிகள் சார்பாகப் பேசுகின்றபோது “The Tamil Diaspora” என்பதற்குப் பதிலாக புலம்பெயர்ந்த தமிழர் என்ற சொற்றொடரை முதன் முதலில் பாவித்தது முதல் நிறைய விடயங்களிந்தப் புத்தகத்தில் உள்ளன. எனக்குத் தெரிந்து புலம்பெயர் இலக்கியம் பற்றிய ஆய்வாக முதலில் வெளிவந்த நூல் (புலம் பெயர் எழுத்தாளரால் எழுதப்பட்ட) இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கின்றேன். இந்த நூலில் அந்தக் காலப்பகுதிவரை புலம்பெயர் நாடுகளில் வெளிவந்த இதழ்கள், சஞ்சிகைகள், மற்றும் இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகள் பற்றி ஆவணப்படுத்தி இருப்பதுடன், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்த நாடுகளிற்கு தான் சென்ற போது தனக்குக் கிட்டிய அனுபவங்களையும் கூறியுள்ளார். அண்மைக்காலத்தில் துவாரகனும் புலம்பெயர் இலக்கியம் பற்றிய சில கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி இருந்தார். இளங்கோவும் தற்காலத்து ஈழத்து இலக்கியம் என்ற கடந்த பத்தாண்டுகளில் ஈழத்து இலக்கியம் பற்றி எழுதிய கட்டுரை ஒன்றில் புலம்பெயர் இலக்கியம் பற்றியும் மிகப் பெரும்பான்மையான அளவிற்கு ஆவணப்படுத்தி இருந்தார். சில வாரங்களிற்கு முன்னர் GTN TVயிற்காக யமுனா ராஜேந்திரனும் குருபரனும்சேர்ந்து புலம்பெயர் நாடுகளில் இருந்து ஆரம்ப காலங்களில் வெளியான சில சிற்றிதழ்களின் ஆசிரியர்களிடம் அது தொடர்பான அவர்களது அனுபவங்களை நேர்காணல் செய்திருந்தனர். இவை எல்லாம் புலம்பெயர் இலக்கியம் பற்றிச் செய்யப்பட்ட காத்திரமான பதிவுகள்.

(சிறு சந்தேகம் ஒன்று:- எஸ்பொ பாரிஸ் சென்றிருந்த போது அங்கே ஒரு இளைஞரை pub ஒன்றில் சந்தித்ததாகவும் கருத்து முரண்பாடுகள் இருப்பினும் அறிவுச் சுதந்திரத்தை முன்னெடுக்கும் பொருட்டே அந்தச் சந்திப்பைச் செய்ததாகவும் பின்னர் அந்த இளைஞர் அந்த உரையாடலை “வானத்திலே சென்ற பிசாசை ஏணி வைத்துப் பிடித்த தாகக்” கதை பண்ணிப் பிரசுரித்ததாகவும் கூறுகிறார். பின்னர் அந்த இளைஞர் உண்மைக்குப் புறம்பான தகவல்களுடன் எழுதிய புலி எதிர்ப்பு நாவல் ஒன்று அற்புதம் என்று புலி எதிர்ப்பாளரர்களால் விளம்பரம் கொடுக்கப்பட்டு தமிழ்நாட்டில் பிரபலமாக்கப்பட்டது (பக்கம் 45) என்றும் கூறுகிறார். அவர் (அந்த இளைஞர்) யாராக இருக்கும் என்று யோசித்துப் பார்க்கின்றேன்.)

நனவிடை தோய்தல்

நனவிடை தோய்தல் (nostalgia) என்றாலே காதலுடன் மாத்திரமே தொடர்புபடுத்திப் பார்க்கின்ற காலத்தில் முதன் முதலாக இந்தப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியதாலோ என்னால் முதல் வாசிப்பில் லயிக்கமுடியவில்லை. ஆனால் அண்மையில் திரும்பவும் வாசித்த போது எனக்கு மிக மிகப் பிடித்த புத்தகங்களில் ஒன்றாகிவிட்டது. 50 ஆண்டுகளுக்கு முன்னைய யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்க்கை முறை மிக மிக அழுத்தமாகவும் அதே நேரம் உணர்வுபூர்வமாகவும், அதே நேரம் வீண் அலங்காரங்களைத் தவிர்த்துப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. எம் போன்றவர்களுக்கு இனி ஒருபோதும் கிட்டப் போகாத யாழ்ப்பாணத்து வாழ்க்கையை எஸ்பொவின் எழுத்துக்களூடாகத் தரிசிப்பதே ஒரு சுகமான அனுபவம்தான். அதே நேரம் அந்நாளைய மக்களின் வாழ்க்கை முறை பற்றிய சிறந்த ஆவணப்பதிவாகவும் இந்தப் புத்தகம் உள்ளது. உதாரணத்துக்கு ஒரு சின்னப் பகிர்வை எஸ்பொவின் எழுத்துக்களிலேயே தருகின்றேன்

“பின்னர், ஐந்து சத நோட்டுக்களும் பாவனைக்கு வந்தன. இது புதினமான நோட்டு. ஒரே தாளில் இடப்பக்கம் இரண்டு சத முத்திரை போலவும் வலப்பக்கம் மூன்று சத முத்திரை போலவும் அச்சிடப்பட்டிருந்தன. தேவை கருதி அந்தத் தாளை இரண்டு முத்திரைகளாகக் கிழித்து, இரண்டு சதமாகவும் மூன்று சதமாகவும் பாவித்துக் கொள்ளலாம். மூன்று சய இரண்டு சமன் ஒன்று என்கிற வாய்ப்பாட்டில் ஒரு சதக் கணக்கும் சரி செய்யப்பட்டது”
இது போல பணம், துட்டு என்கிற பிரயோகங்கள் மெல்ல வழக்கொழிந்து எப்படி ரூபா சதம் என்கிற பாவனை வந்தது என்பதையும் மிகச் சுவாரசியமாகச் சொல்லுகின்றார் எஸ்பொ. நாலு பணம் என்பது இருபத்தைந்து சதம். இந்தக் கணக்கின் அடிப்படையில் 3 பணம் என்றால் அது பதினெட்டுச் சதமா அல்லது பத்தொன்பது சதமா என்று பெரிய வாக்குவாதம் கூட நடைபெற்றதாம்.

(எஸ்பொ எழுதிய ஆண்மை, வீ, அப்பாவும் மகனும், அப்பையா, முறுவல் போன்றவற்றை வாசித்திருந்தாலும் அதை இன்னொரு பதிவில் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.)

 

பிற்குறிப்பு

எனக்குப்பிடித்த சில ஆளுமைகளின் மரணத்தின்போது எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் தனமாய் பிழையான தகவல்களுடன், எதேச்சைத்தனமாக அஞ்சலிக்குறிப்புகளை எழுதித்தள்ளிய ஜெயமோகன் அவர்கள் எஸ்பொ அவர்களின் மரணத்திற்கான அஞ்சலிக்குறிப்பையும் விக்கிப்பீடியாவில் தான் பொறுக்கிக்கொண்ட தகவல்களைக் கொண்டு எழுதித்தள்ளியுள்ளார்.

எஸ்பொ பற்றிய விக்கிப்பீடியா குறிப்பையும், ஜெயமோகன் எஸ்பொவிற்கு எழுதிய அஞ்சலிக்குறிப்பையும் ஒருங்கே வாசித்துப்பார்த்தால், “எஸ்.பொ என்னுடன் நெருக்கமான தொடர்புள்ளவராக இருந்தார். சென்னையில் இருந்தால் என்னை அழைப்பார். நான் அவரைச் சென்று பார்ப்பதுண்டு. ஈழ இலக்கியப்பூசல்களைப் பற்றியும் அக்கால அரசியல் பற்றியும் ஏராளமான வேடிக்கைக் கதைகளை சொல்லியிருக்கிறார்.” என்று ஜெயமோகன் சொல்லும் எஸ்பொ பற்றிச்சொல்ல எனக்கு உடனடியாக சில செய்திகள் உண்டு,

1. //அவரது மகன் பொன் அநுர சிட்னியில் புகழ்பெற்ற மருத்துவர். எஸ்.பொ ஆஸ்திரேலியக் குடிமகன்.// எஸ்பொ அவர்களின் இன்னொரு மகனான மித்ர ஈழவிடுதலைப்போரில் 1986ல் மரணமடைந்த போராளியாவார். அவரது இயக்கப் பெயரான அருச்சுனா என்ற பெயரினையே அவர் நினைவாக யாழ்நகரில் முக்கியமான தெருக்களில் ஒன்றான “ஸ்ரான்லி வீதி” என்பதற்கு பதிலாக புலிகள் காலத்தில் யாழ் நகரில் பாவித்தனர்.  இது தவிர எஸ்பொவிற்கு மகள் ஒருவரும் உண்டு.

2. //எஸ்.பொ செனகல் நாட்டு எழுத்தாளரான செம்பென் ஒஸ்மேனுடைய ஹால [Xala] என்ற குறுநாவலையும் கூகி வா தியோங்கோ என்ற கென்ய நாட்டு எழுத்தாளரின் தேம்பி அழாதே பாப்பா [Weep Not Child] என்ற நாவலையும் தமிழாக்கம் செய்திருக்கிறார்.//
எஸ்பொ ஒரு வேலைத்திட்டமாக ஆபிரிக்க நாவல்களை தமிழுக்கு மொழியாக்கம் செய்தார். அவற்றை ஒரே தொகுதியாகவே மக்களிடம் கொண்டுசெல்லவும் முயன்றார்.  (2011ல் ரொரன்றோ வந்திருந்தபோதும் அவர் அப்போது மொழியாக்கம் செய்து முடித்திருந்த 5 நாவல்களை ஒரே தொகுதியாகவே விற்பனை செய்தார்.  இவற்றில் சினுபா ஆச்சிபேயின் A Man of the People என்பதை “மக்களின் மனிதன்” என்று மொழியாக்கம் செய்ததும், நக்வீப் மஹ்ஃபூஃப் எழுதிய Miramar என்பதை சாதாரணன் மொழியாக்கம் செய்ததும், ஜே எம் கூற்சி எழுதிய The Disgrace என்பதை “மானக்கேடு” என்று மொழியாக்கம் செய்ததும், மையா கௌரோ எழுதுய “The Sleep Walking Land” என்பதை நித்திரையில் நடக்கும் நாடு என்று மொழியாக்கம் செய்ததும், கம்ரன் லெயெ எழுதிய The African Child என்பதை கறுப்புக் குழந்தை என்று மொழியாக்கம் செய்ததும், என்று பத்துக்குமேற்பட்ட ஆபிரிக்க இலக்கிய நூல்களை தமிழாக்கம் செய்து மக்களிடன் கொண்டுசெல்ல முயன்றார். அவரளவில் அவர் முன்னெடுத்த அரசியலுக்கு பண்பாட்டு ரீதியில் வலிமைசேர்ப்பதாகவும் இந்த இலக்கியங்களை அவர் கண்டுகொண்டார். இவைதவிர அவர் வெவ்வேறு காலப்பகுதிகள் செய்த மொழியாக்கங்கள் மகாவம்ச உட்பட பல!

3. //ஒட்டுமொத்த ஈழப்போராட்டத்தின் பின்னணியைச் சொல்லும் சுயசரிதையான ‘வரலாற்றில் வாழ்தல்’ ஓர் ஆவணக்களஞ்சியம்.// வரலாற்றில் வாழ்தல் 2003இல் வெளியானது.  ஈழப்போராட்டத்தின் முக்கிய காலகட்டங்களான சமாதானப் பேச்சுக் காலகட்டம், நாலாம் கட்ட ஈழப்போர் ஆகியன அந்த நூலில் இல்லை.  எனவே அது ஒட்டுமொத்த ஈழப்போராட்டத்தின் பின்னணியைச் சொல்வது அல்ல.

 

 

 

2 thoughts on “எஸ்பொ பற்றி ஒரு நனவிடை

Add yours

  1. பாரிஸில் சந்தித்த அந்த புலி எதிர்ப்பு நாவலை வெளியிட்டநபர் ஷோபா சக்தியாக இருக்கலாம்..

    Like

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑